சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டியில் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் பங்கேற்க இரு நாட்கள் முன்பே சிஎஸ்கே வீரர்கள் அங்கு சென்றடைந்தனர். அனைத்து வீரர்களும் நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தோனி இதுவரை சிஎஸ்கே அணியின் பயிற்சியில் பங்கேற்கவில்லை.

அதே சமயம், சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள மாற்று விக்கெட் கீப்பர் ஆரவெல்லி அவனிஷ் தீவிர விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் அவருக்கு தொடர்ந்து ஆலோசனைகள் கூறினார். இந்த சம்பவங்களை வைத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில ரசிகர்கள் தோனிக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவேளை தோனி சிஎஸ்கே அணியில் ஆடவில்லை என்றால் பேட்டிங்கில் பெரிய பாதிப்பு இல்லை. அந்த அளவுக்கு சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையை பலப்படுத்தி வைத்துள்ளது. ஆனால், விக்கெட் கீப்பிங்கில் சிஎஸ்கே அணி நிச்சயம் அடி வாங்கும்.

மேலும், கேப்டன் பதவியில் இருந்து விலகிய போதும் களத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆலோசனை சொல்வது, ஃபீல்டிங் நிறுத்துவது போன்ற சில முக்கிய பணிகளை செய்து வந்தார் தோனி. அந்த விஷயத்திலும் சிஎஸ்கே அணிக்கு தோனி ஆடாதது பெரிய பின்னடைவாக இருக்கும்.
தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற இருப்பதால் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்தது போல, சிஎஸ்கே அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பரை தோனி தயார் செய்கிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், வழக்கம் போல பயிற்சியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, தோனி களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.