விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா பாய்ந்து பிடித்த கேட்ச் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை அதிரடி ஆட்டம் ஆடி வந்த டேவிட் வார்னரை வெளியேற்றி சிஎஸ்கே அணி மீண்டும் போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தது.
டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 13வது ஐபிஎல் லீக் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் நான்கு ஓவர்களில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீபக் சாஹர் கட்டுக் கோப்பாக வீசினர். 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி. ஆனால், தீபக் சாஹர் வீசிய ஐந்தாவது ஓவரில் 18 ரன்கள் சேர்த்த வார்னர் - ப்ரித்வி ஷா ஜோடி, அடுத்து முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து பவர் பிளே முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின் ஜடேஜா பந்து வீசிய இரண்டு ஓவர்களில் மொத்தம் 24 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. போட்டி முற்றிலுமாக டெல்லி அணியின் பக்கம் இருந்தது. அப்போது முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசிய 10வது ஓவரில் ரிவர்ஸ் லாப் ஷாட் அடித்தார் வார்னர். அப்போது பின்னே ஃபீல்டிங் நின்று இருந்த பதிரானா சில அடி தூரம் பின்னே சென்று பாய்ந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். பந்து நேராக வராத போதும் பதிரானா பாய்ந்து கேட்ச் பிடித்ததை டேவிட் வார்னரால் நம்ப முடியவில்லை. அவர் அவுட் ஆகி வெளியேறினார். பதிரானா கேட்ச்சை அருகே நின்று இருந்த தோனி கைதட்டி பாராட்டினார் .
அதன் பின் போட்டி ஓரளவு சிஎஸ்கே பக்கம் சாய்ந்தது. பின்னர் பதிரானா 15வது ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றினார்.