டெல்லி : டெல்லி அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு அவரின் ஒழுக்கம் முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா. கேப்டனாக யு19 உலகக்கோப்பை தொடரில் வென்ற பிரித்வி ஷாவை டெல்லி அணி நிர்வாகம் ஐபிஎல் ஏலத்தில் போட்டி போட்டு வாங்கியது. அதற்கேற்ப சில போட்டிகளில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடினாலும், கடந்த சீசன் முதல் பிரித்வி ஷாவின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக மாறியது.

கடந்த ஐபிஎல் தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே விளாசிய பிரித்வி ஷா, மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த இன்னிங்ஸையும் விளையாடவில்லை. இருப்பினும் கடந்த ஐபிஎல் சீசனுக்கு பின் கவுண்டி கிரிக்கெட், ரஞ்சி டிராபி உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி பிரித்வி ஷா நல்ல ஃபார்மில் டெல்லி அணிக்கு திரும்பினார் பிரித்வி ஷா.
ஆனால் டெல்லி அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் பிரித்வி ஷா இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் கூட இடம்பெறவில்லை. இதற்கு பிரித்வி ஷாவின் ஒழுக்கமின்மையே காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனின் போது டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் நடைபெற்ற விருந்தில், டெல்லி அணி வீரர் ஒருவர் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த சர்ச்சைக்கு பின் டெல்லி அணி விளையாடிய அடுத்த போட்டியிலேயே பிரித்வி ஷா நீக்கப்பட்டிருந்தார். அதேபோல் பயிற்சியின் போதும் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சொல்வதை செய்யாமல் தன் பாணிக்கு பிரித்வி ஷா செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் இந்த சீசனின் முழுவதும் மாறி, தனது திறமையை பிரித்வி ஷா வெளிப்படுத்துவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் பிரித்வி ஷாவின் ஃபிட்னஸ் மீது டெல்லி அணி நிர்வாகம் சந்தேகம் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 மாதங்களுக்கு பின் களமிறங்கியுள்ள ரிஷப் பண்ட் முழு ஃபிட்னஸ் உடன் களத்திற்கு வந்துள்ள நிலையில், பிரித்வி ஷாவின் ஃபிட்னஸ் குறித்து ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், பிரித்வி ஷா குறித்து பாண்டிங் மற்றும் கங்குலி இருவரிடமும் பேசினேன். ஒரு அணியாக அவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதனால் அவர்களின் வாதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றே நினைப்பதாக தெரிவித்துள்ளார்.