விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 13வது 2024 ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமே டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களின் இரண்டாவது சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தின் பிட்ச்சை சரியாக பயன்படுத்தியது தான். அந்த பிட்ச் குறித்த எந்த தகவலும் சிஎஸ்கே அணிக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்து இருந்தது. மூன்றாவதாக சிஎஸ்கே அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது அந்த அணி. விசாகப்பட்டினம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இரண்டாவது சொந்த மைதானமாக உள்ளது. அங்கு தான் சிஎஸ்கே அணியை சந்தித்தது டெல்லி கேபிடல்ஸ்.

இந்த ஆண்டு இந்தப் போட்டிக்கு முன் நடந்த 12 ஐபிஎல் போட்டிகளில் சொந்த மைதானத்தில் ஆடிய அணிகளே 11 முறை வெற்றி பெற்று இருந்தன. அதற்கு காரணம், ஒவ்வொரு அணியும் தனக்கு சாதகமாக பிட்ச்சை மாற்றியது தான் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அதே வேலையை தான் டெல்லி கேபிடல்ஸ் அணியும் செய்தது.
விசாகப்பட்டினம் மைதானம் இரண்டு விதமாக பந்து பவுன்ஸ் ஆகுமாறு வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் எந்த அணி பேட்டிங் செய்தாலும் அந்த அணியின் வீரர்கள் பிட்ச்சை விரைவில் புரிந்து கொண்டால் மட்டுமே ரன் குவிக்க முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் போட்ட திட்டத்தின் படி பிட்ச் தயாராகி இருந்ததால் அந்த அணியின் வீரர்கள் பிட்ச் குறித்து நன்கு அறிந்து இருந்தனர். இதை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.
அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 12 பந்துகளை சந்தித்தும் பிட்ச் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறினார். அவர் 12 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 6 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போதே சிஎஸ்கே அணி பெரிய அளவில் பின்தங்கியதால் அந்த அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது.