விசாகப்பட்டினம் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய அழுத்தத்தில் உள்ளது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் சிஎஸ்கே அணி பலமாக உள்ளது. ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே ஆகிய இருவரும் சிறப்பாக ரன் குவித்துள்ளனர். இவர்களைத் தவிர ருதுராஜ், ரஹானே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி என அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நிச்சயம் அதிரடி ஆட்டம் ஆடும் ரச்சின் ரவீந்திரா மற்றும் சிவம் துபேவை முதலில் வீழ்த்த வேண்டும். அவர்களை கட்டுப்படுத்தினால், பின்னர் மற்ற பேட்ஸ்மேன்களை சமாளித்து விடலாம் என டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் திட்டமிட்டு ஒரு புதிய பந்துவீச்சாளரை களமிறக்க இருக்கிறார்.
அந்த புதிய பந்துவீச்சாளர் லலித் யாதவ். வலது கை ஆஃப் ஸ்பின்னரான அவர், சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களான ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை சமாளித்து விடுவார் என அவர் நம்புகிறார். லலித் யாதவ் 27 வயதான டெல்லி மாநிலத்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர். அவர் இதுவரை 80 உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்று, அதில் 66 முறை பந்து வீசி 53 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இவர் ஓரளவு பேட்டிங்கும் செய்வார். எனினும், இவரை இம்பாக்ட் வீரராக பந்து வீச மட்டும் பயன்படுத்திக் கொள்ள டெல்லி அணி திட்டமிட்டு இருக்கிறது. எனினும், போட்டி சூழ்நிலையை பொறுத்து இவருக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்.