டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் எடுத்த தவறான முடிவே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 8 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 88 ரன்களும், அக்சர் படேல் 43 பந்துகளில் 66 ரன்களும் விளாசினர்.

இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியடைந்தது. கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷீத் கான் 1 ரன்னை மட்டுமே எடுத்தார். இதனால் குஜராத் அணி இந்த ஐபிஎல் தொடரில் 5வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
குஜராத் அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில் எடுத்த ஒரு முடிவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குஜராத் அணிக்காக களமிறங்கிய சாய் கிஷோர் பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுகை பேட்ஸ்மேன்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களத்தில் இருந்ததால், அவருக்கு பவுலிங் செய்யவே வாய்ப்பு கொடுக்கவில்லை.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை ஸ்பின்னர்கள் பவுலிங் செய்தால் அதிக ரன்கள் அடிக்கப்பட வாய்ப்புள்ளதால், சுப்மன் கில் ரிஸ்க் எடுக்கவில்லை. ஆனால் அக்சர் படேல் ஆட்டமிழந்து வெளியேறிய பின், அதிரடி வீரர் ஸ்டப்ஸ் வந்தார். இதனால் அட்டாக் செய்ய நினைத்த சுப்மன் கில், திடீரென 19வது ஓவரை வீச சாய் கிஷோரை கொண்டு வந்தார்.
இந்த முடிவால் பவுண்டரி லைனில் நின்றிருந்த பயிற்சியாளர் நெஹ்ராவும் அதிர்ச்சியடைந்தார். அந்த ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. நூர் அஹ்மத் மற்றும் சந்தீப் வாரியர் இருவருக்கும் ஒரு ஓவர் மீதமிருந்த சூழலில், சுப்மன் கில் ஏன் சாய் கிஷோரை கொண்டு வந்தார் என்றே புரியவில்லை. அந்த ஓவரில் ஸ்டப்ஸ் அடித்த அடியால், கடைசி ஓவரில் ரிஷப் பண்ட்-ம் பொளந்து கட்டினார். இதனால் சுப்மன் கில் கேப்டன்சியில் இன்னும் ஏராளமான அனுபவங்களை பெற வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.