விசாகப்பட்டினம் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடந்த இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மேலும், இரண்டு போட்டிகளில் 8 ஓவர்கள் வீசி 100 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.
அதனால், அவரை பலரும் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். அதனால் மிட்செல் ஸ்டார்க் கடும் அழுத்தத்தில் இருந்தார். அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதைக் கூட டி20 போட்டிகளில் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது அவருக்கு அழுத்தத்தை கொடுத்தது. 24.75 கொடுத்து வாங்கியும் விக்கெட் வீழ்த்தாமல் பணத்தை வீணடித்து விட்டார் என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு அவரை கிண்டல் செய்தனர்.

இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் தனது முதல் மூன்று ஓவர்களை தொடர்ந்து வீசினார். அதில் 25 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் என இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார்.
இதன் மூலம் கடந்த 10 நாட்களாக தன்னை பற்றி இருந்த விமர்சனத்தை துடைத்து எறிந்து இருக்கிறார். மிட்செல் ஸ்டார்க் இந்தப் போட்டியில் எளிதாக விக்கெட் வீழ்த்த மற்றொரு காரணமும் உள்ளது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது.
இத்தனை பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யத் துவங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனால் மிட்செல் ஸ்டார்க் எளிதாக விக்கெட் வீழ்த்தி தன் மீதான விமர்சனத்தில் இருந்து தற்காலிகமாக தப்பி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் 273 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.