டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட லக்னோ அணி வீரர்கள் தலைநகருக்கு பயணித்த நிலையில், கேப்டன் கேஎல் ராகுல் அவர்களுடன் பயணிக்காதது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற லக்னோ அணி, இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கேகேஆர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக லக்னோ அணி அடைந்த தோல்வி, அந்த அணிக்கு பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, இதுவரை 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள நிலையில், அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்தால் மட்டுமே லக்னோ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கவுள்ளது.
இதனிடையே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கேஎல் ராகுல் கேமராக்கள் முன்னாடியே விளாசி தள்ளினார். கேஎல் ராகுல் நிதானமாக பதிலளித்த போதும், சஞ்சீவ் கோயங்கா கொந்தளித்தார். இதனால் கேஎல் ராகுல் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், வீரர்கள் யாருடனும் பேசாமல் அமைதி காப்பதாகவும் தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாமல் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுலை அடுத்த சீசனில் விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட லக்னோ அணி வீரர்கள் டெல்லிக்கு பயணித்தனர்.
லக்னோ அணி வீரர்களுடன் கேப்டன் கேஎல் ராகுல் இணைந்து பயணிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது அணி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் நேரடியாக பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் லக்னோ அணி நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கு இடையில் புரிதல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.