டெல்லி : டெல்லி அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மோசமாக செயல்பட்ட டெல்லி அணி, இரண்டாம் பாதியில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. இதன் காரணமாக 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த சீசனில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சீசனில் டெல்லி அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா வெறும் 198 ரன்களை மட்டுமே சேர்த்தார். நல்ல ஃபார்மில் இருந்தாலும், இன்னும் கன்சிஸ்டன்சி பிரச்சனையுடன் இருப்பது டெல்லி அணி நிர்வாகிகளால் ரசிக்கப்படவில்லை. இதன் காரணமாக மே மாதத்தில் நடந்த எந்த போட்டியிலும் பிரித்வி ஷா களமிறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே பேசுகையில், டெல்லி அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் பிரித்வி ஷாவும் ஒருவர். கடைசியாக நாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுதான் ஐபிஎல் தொடர். நீங்கள் ஃபார்மில் இல்லையென்றால், உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காது.
அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி ஒட்டுமொத்தமாக பரபரப்பாக இருந்தது. அனைத்து போட்டிகளும் நாக் அவுட் போல் அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டுமென்பதால், பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் இல்லையென்றாலும் எங்களால் வெல்ல முடிந்தது. அதேபோல் பிரித்வி ஷாவிற்கு மாற்றாக வாய்ப்பை பெற்ற அபிஷேக் பொரேல், சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெக்கர்க் டக் அவுட்டான போதும், பொரேலின் ஆட்டம் மிரள வைத்தது. அவரின் அதிரடியால் 6 ஓவர்களில் 73 ரன்களை டெல்லி அணி குவித்தது. அவரும் ஷாய் ஹோப்பும் இணைந்து 92 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவே வெற்றிக்கு முக்கியமாக மாறியதாக தெரிவித்தார். இதனால் பிரித்வி ஷா மீண்டும் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.