மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக பாதியுடன் விலகினார். இதன் பின் 3 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த அவர், நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் மோசமான பவுலிங்கிற்கான எகனாமி ரேட்டில் 2வது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். ஹர்திக் பாண்டியா வீசும் ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் 12 ரன்களை விட்டுக் கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் நேரடியாக டி20 உலகக்கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை இனியும் தொடரக் கூடாது. ஏனென்றால் நாம் இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் என்ற பெயருக்கு ஏற்றாற் போல், சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இதுவரை எந்த இம்பேக்டையும் செய்யவில்லை.
ஐபிஎல் தொடரின் ஆட்டத்தையும், சர்வதேச ஆட்டத்தையும் நாம் குழப்பி கொள்கிறோம். அதேபோல் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், ஹர்திக் பாண்டியா ஓராண்டாவது முதலில் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அவர் விருப்பப்பட்டு விளையாட கூடாது. தனி மனிதர்களுக்கோ அல்லது வீரர்களுக்கோ முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்த வேண்டும்.
அப்படி நடந்தால், நிச்சயம் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாது. ஆஸ்திரேலியா அணியால் அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வெல்ல முடிவதற்கு காரணம், கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். அதேபோல் புரிதல் இந்திய அணி நிர்வாகத்திற்கு இல்லையென்றால், நிச்சயம் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.