டெல்லி : மும்பை அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற புதிய சாதனையை லூக் வுட் படைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை விளாசியது. அதிரடியாக ஆடிய மெக்கர்க் 27 பந்துகளில் 6 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 84 ரன்களையும், ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ரன்களையும், ஹோப் 17 பந்துகளில் 41 ரன்களையும் விளாசினர்.

மும்பை அணி தரப்பில் பும்ரா மட்டும் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல் மும்பை அணியின் இளம் வீரர் லூக் வுட் 4 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இவர் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்களும், 2வது ஓவரில் 8 ரன்களும், 3வது ஓவரில் 15 ரன்களும், 4வது ஓவரில் 26 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்.
லூக் வுட் ஓவரில் மட்டும் 4 சிக்ஸ், 9 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. மொத்தமாகவே 5 டாட் பால்களை மட்டுமே வீசியுள்ளார். இதன் மூலமாக மும்பை அணியின் வரலாற்றில் லூக் வுட் இடம்பிடித்துள்ளார். அதாவது மும்பை அணிக்காக மோசமான பவுலிங் செய்து அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்கள் பட்டியலில் லூக் வுட் முதலிடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய இளம் வீரர் மபாகா 4 ஓவர்களில் 66 ரன்களை விட்டுக் கொடுத்ததே சாதனையாக இருந்தது. அதற்கு முன் 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக லசித் மலிங்கா 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
அதேபோல் இந்த பட்டியலில் 4வது இடத்தில் 2022ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டேனியல் சாம்ஸ் 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்த சீசனில் மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக லூக் வுட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் மோசமான சாதனையை படைத்திருப்பது மும்பை அணி ரசிகர்களிடையே விமர்சனத்தை சந்தித்துள்ளது.