டெல்லி : மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே டெல்லி அணியின் இளம் வீரர் மெக்கர்க் சிக்சர் அடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான 43வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி தரப்பில் கோட்ஸி நீக்கப்பட்டு லூக் வுட் மற்ரும் டெல்லி அணிக்காக பிரித்வி ஷா நீக்கப்பட்டு குமார் குசாக்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்பின் டெல்லி அணி தரப்பில் அதிரடி இளம் வீரர் மெக்கர்க் - அபிஷேக் போரெல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் முதல் ஓவரை லூக் வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த மெக்கர்க், 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து 3வது பந்தில் சிக்சர் அடிக்க, ஒரு நிமிடம் களத்தில் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் வியந்து பார்த்து கொண்டிருந்தனர்.
மீண்டும் 5வது பந்திலும் பவுண்டரி அடிக்கப்பட, அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் விளாசப்பட்டது. முதல் ஓவரிலேயே டெல்லி அணி அட்டாக் செய்ததால், உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால் பும்ரா வீசிய முதல் பந்தையும் மெக்கர் சிக்சருக்கு பறக்கவிட, மொத்த மும்பை அணி வீரர்களும் மிரண்டே போயினர்.
அதுமட்டுமல்லாமல் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட, அடுத்த பந்திலேயே பவுண்டரி விளாசினார். பும்ரா வீசிய 2வது ஓவரில் மொத்தமாக ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் துஷாரா வீசிய 3வது ஓவரில் மெக்கர்க் 4 பவுண்டரிகளை விளாச திணறடித்தார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் 3 ஓவர்களிலேயே 55 ரன்களாக உயர்ந்தது.
இந்த நிலையில் 4வது வீச பியூஷ் சால்வா அழைக்கப்பட்டார். இவரின் 2வது பந்திலேயே மெக்கர்க் சிக்ஸ் அடித்து தனது அரைசதத்தை வெறும் 15 ரன்களில் எட்டினார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை மெக்கர்க் படைத்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.