டெல்லி : டெல்லி அணியின் ஸ்பின்னரான அக்சர் படேலை அட்டாக் செய்யாமல் இருந்தது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி சந்திக்கும் 6வது தோல்வி இதுவாகும். இதன் காரணமாக 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைக்கப்படும்.
இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடரில் த்ரில்லர் போட்டியாக மாறி வருகிறது. வெற்றி, தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 2 ஓவர்களாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் வித்தியாசத்தில் 2 பந்துகளாக உள்ளது. இதுபோன்ற போட்டிகளால் பவுலர்கள் தொடர்ந்து அழுத்தத்துடன் இருக்கின்றனர்.
இம்முறை பேட்ஸ்மேன்கள் இலக்கை எட்ட முயற்சி செய்தோம். இந்த போட்டியை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் நாங்கள் சில சிக்சர்களை விளாச முயற்சித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அக்சர் படேல் பவுலிங்கை இடதுகை பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்திருக்க வேண்டும். ஆனால் விழிப்புடன் இருக்காமல் தவறவிட்டோம்.
அதேபோல் டெல்லி அணியின் இளம் வீரர் ஃப்ரேசர் மெக்கர்க் அற்புதமாக பேட்டிங் செய்தார். ஃபீல்ட் செட்டப்பை பார்த்து பின்னர் அதற்கேற்ப கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தார். அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது இளைஞர்களுக்கு அச்சமில்லை என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. டாஸ் வென்ற பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்ற முடிவை மாற்ற இப்போதும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.