முல்லான்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்த நிலையில் ஒரே மாதிரி நான்கு பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இரண்டு பேட்ஸ்மேன்களும், டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்த இரண்டு பேட்ஸ்மேன்களும், சிக்ஸ் அடித்த பின் அதற்கு அடுத்த பந்திலேயே தங்கள் விக்கெட்டை பறி கொடுத்துள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் குவித்தது. அடுத்து சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அவர் 3 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அவர் தனது மூன்றாவது சிக்ஸர் அடித்த பின் அதற்கு அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அஜின்க்யா ரஹானேவும் அதே போலவே தனது இரண்டாவது சிக்ஸ் அடித்த பின், அதற்கு அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் மற்றும் ஷாய் ஹோப் இதே போலவே சிக்ஸ் அடித்த பின் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர்.
மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 20 ரன்களும், ஷாய் ஹோப் 25 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து இருந்தனர். இவர்கள் நால்வருமே ஓரளவு ரன் எடுத்த பின்னரே சிக்ஸ் அடிக்கும் ஆசையில் தங்கள் விக்கெட்டை ஒரு சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே பறி கொடுத்து இருக்கின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் இனி பல பேட்ஸ்மேன்களும் இதே போல அதிக ஸ்ட்ரைக் ரேட்டை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் விக்கெட்டை பறி கொடுக்கக் கூடும்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 174 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.