டெல்லி : ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அந்த அணியின் உரிமையாளர் மனோஜ் ஆகியோரை சந்தித்து டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கைகுலுக்கி உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 86 ரன்களை விளாசினார். முகேஷ் குமார் பவுலிங்கில் இவர் அடித்த பந்தை ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். பவுண்டரி எல்லைக்கு அருகே ஹோப் கால் இருந்ததால், நடுவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதன்பின் 3வது நடுவரிடம் சந்தேகம் கேட்க, ஒரு நிமிடத்தில் வெறும் 3 முறை மட்டுமே ரீ-பிளே செய்து பார்த்து சஞ்சு சாம்சனுக்கு அவுட் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடுவர்களுடன் களத்திலேயே சஞ்சு சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது மைதானத்தில் இருந்த டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், சஞ்சு சாம்சனை பார்த்து "வெளியே போ" என்று கைகளை காட்டி ஆக்ரோஷமாக கத்தினார். ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கு முன் சஞ்சு சாம்சன் டெல்லி அணிக்காக விளையாடிய போதும், சஞ்சு சாம்சனை பார்த்து பார்த் ஜிண்டால் இப்படி கத்தியது சர்ச்சையாகியது.
இதன்பின் சோசியல் மீடியாவில் டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டாலை ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜ் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரையும் பார்த் ஜிண்டால் சந்தித்து கைகுலுக்கி சில நிமிடங்கள் உரையாடியுள்ளார்.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்காக சஞ்சு சாம்சனுக்கு பார்த் ஜிண்டால் வாழ்த்து கூறியதும் தெரிய வந்துள்ளது. போட்டியின் போது ஆக்ரோஷமாக இருந்த பார்த் ஜிண்டால், ஆட்டம் முடிவடைந்த பின் சஞ்சு சாம்சனிடம் நேரில் வாழ்த்து உரையாடியது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை காட்டுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்