டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சனுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 65 ரன்களும், மெக்கர்க் 50 ரன்களும் விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 6 சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 86 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையானது.
முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று சஞ்சு சாம்சன் பேட்டை ஓங்கினர். அது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஷாய் ஹோப் கைகளில் சென்று விழுந்தது. இருப்பினும் ஷாய் ஹோப் அந்த கேட்சை சரியாக எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் சில ரீ-பிளேவில் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்த போது, பவுண்டரி எல்லையில் கால் பட்டது போல் தெரிந்தது.
ஆனால் 3வது நடுவர் ஒரு நிமிடத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் என்று தீர்ப்பு வழங்கினார். இதனை ஏற்காத சஞ்சு சாம்சன், நடுவர்களுடன் சில நிமிடங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் 3வது நடுவரின் தீர்ப்பை ஏற்காத சஞ்சு சாம்சன், கோபத்தில் மேல் முறையீடு எடுப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சனின் நடவடிக்கையை கண்டித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம்அபராதமாக சஞ்சு சாம்சனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.