டெல்லி : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் பவுலிங்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற ரிஷப் பண்ட் நினைத்திருப்பார். ஏனென்றால் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி பொளந்து கட்டியது.

கலீல் அஹ்மத் வீசிய முதல் ஓவரில் 19 ரன்களும், லலித் யாதவ் வீசிய 2வது ஓவரில் 21 ரன்களும், நார்கியே வீசிய 3வது ஓவரில் 22 ரன்களும், லலித் யாதவ் வீசிய 4வது ஓவரில் 21 ரன்களும், தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய 5வது ஓவரில் 20 ரன்களும் விளாசப்பட்டது. 2.4 ஓவர்களில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்த நிலையில், 5 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியது. தொடர்ந்து 6வது ஓவரில் 22 ரன்கள் சேர்க்கப்பட, பவர் பிளே ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் குழம்பி நின்றார். எப்படி வீசினாலும் அடிக்கிறார்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வீடியோ கேம் விளையாடுவதை போல் சிக்ஸ், பவுண்டரி விளாசி தள்ளினார்கள். இருப்பினும் குல்தீப் யாதவ் வீசிய 7வது ஓவரில் அபிஷேக் சர்மா 46 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மார்க்ரமும் 1 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து ட்ராவிஸ் ஹெட் - கிளாசன் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரையும் வைத்து 8வது ஓவரில் அக்சர் படேல் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். அதேபோல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கிளாசனும் அடுத்த ஓவரிலேயே 15 ரன்களில் வெளியேற, டெல்லி அணி ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டது. 10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி - ஷபாஸ் அஹ்மத் இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விளாசியதால், 15 ஓவர்களிலேயே ஐதராபாத் அணி 200 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் ஆட்டமிழக்க, அப்துல் சமாத் களமிறக்கப்பட்டார். 19 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 250 ரன்களை எடுக்க, கடைசி ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே சமாத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது.
இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஷபாஸ் அஹ்மத் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி மொத்தமாக 22 சிக்ஸ் மற்றும் 18 ஃபோர்ஸ் விளாசப்பட்டது. இதன் மூலமாக ஒரே சீசனில் 3வது முறையாக ஐதராபாத் அணி 250 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.