டெல்லி : ஐதராபாத் அணியின் நட்சத்திர ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 30 ரன்களை டெல்லி அணியின் மெக்குர்க் விளாசி இருக்கிறார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி விளையாடுகிறது. டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் முதல்முறையாக டெல்லி அணி இந்த சீசனில் களமிறங்கியது. சிறிய மைதானம் என்பதோடு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 32 பந்துகளும் 89 ரன்களும், ஷாபாஸ் அஹ்மத் 29 பந்துகளில் 59 ரன்களும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பின் 267 என்ற மெகா இலக்கை நோக்கி டெல்லி அணியின் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரை வீச புவனேஷ்வர் குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தரை அழைத்தார் பாட் கம்மின்ஸ். பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவருமே ஸ்பின்னுக்கு திணறுவார்கள் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை பிரித்வி ஷா விளாசிய நிலையில், 5வது பந்தை கொஞ்சம் வேகம் குறைத்து வீசினார். அதில் ஏமாந்து பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து புவனேஷ்வர் குமார் வீசிய 2வது ஓவரில் டேவிட் வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இளம் வீரர் மெக்குர்க் - அபிஷேக் போரெல் கூட்டணி இணைந்தது.
இந்த நிலையில் 3வது ஓவரை வீச மீண்டும் வாஷிங்டன் சுந்தர் வந்தார். அந்த ஓவரில் அதிரடி வீரர் மெக்குர்க் 4, 4, 6, 4, 6, 6 என்று 30 ரன்களை விளாசி அசத்தினார். எந்த பக்கம் வீசினாலும் பவுண்டரி நிச்சயம் என்ற ரேஞ்சில் மெக்குர்க் விளாசியது டெல்லி அணி ரசிகர்களை மிரள வைத்தது. இதனால் டெல்லி ஓய்வறையில் அமர்ந்திருந்த பாண்டிங், கங்குலி உள்ளிட்டோரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.