டெல்லி : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஃப்ரேசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டெல்லி - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலாஞ ஆட்டத்தில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டும், முறியடிக்கப்பட்டும் வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் விளாசியது. சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

இதன்பின் 267 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் இருவருக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அதிரடி வீரர் மெக்குர்க் பேட்டிங்கை நம்பியே டெல்லி அணியின் ஆட்டம் அமைந்தது. அவர் வாஷிங்டன் சுந்தர் வீசிய 3வது ஓவரிலேயே 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 30 ரன்களை விளாசினார்.
தொடர்ந்து கம்மின்ஸ் பவுலிங்கிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை மெக்குர்க் விளாச, பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்ததும் மயங்க் மார்க்கண்டே அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் மெக்குர்க் சிக்சர் அடித்து 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய அவர், 18 பந்துகளில் 7 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 18 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஃப்ரேசர் மெக்குர்க் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்பாக ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளிலும், கேஎல் ராகுல் மற்றும் கம்மின்ஸ் இருவரும் 14 பந்துகளிலும் அரைசதம் அடித்துள்ளனர். இவர்களுக்கு பின் ஃப்ரேசர் மெக்குர்க் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் டெல்லி அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மெக்குர்க் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக டெல்லி அணிக்காக கிறிஸ் மோரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான விளையாடிய போது 17 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.