டெல்லி : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி ஆல் அவுட்டாகியது. டெல்லி அணி தரப்பில் சிறப்பாக ஆடிய மெக்குர்க் 18 பந்துகளில் 65 ரன்களை விளாசினார். அதேபோல் ஐதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 14 டாட் பால்கள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், டாஸில் பவுலிங் செய்வதாக முடிவு எடுத்ததற்கு பின் பனிப்பொழிவு வரும் என்று நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை போல் எந்த பனிப்பொழிவும் வரவில்லை. ஆனால் நாங்கள் ஐதராபாத் அணியை 220 முதல் 230 ரன்களுடன் நிறுத்தி இருந்தால், எங்களுக்கு வெல்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை பவர் பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் 125 ரன்களை விளாசினார்கள். அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. அதேபோல் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்சில் பந்து நன்றாக நின்று வந்தது. 260 முதல் 270 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை.
இதுபோன்ற நேரங்களில் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் திட்டங்களுடன் தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும். மெக்குர்க் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடினார். ஒரு அணியாக இதுபோன்ற வீரர்களிடம் இருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த போட்டியில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை சரி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.