மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய இரண்டாவது போட்டியிலும் தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி அணி வீரர்கள் ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
எனினும் அந்த அணி 185 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய டெல்லி அணியும் அபாரமாக விளையாடினாலும் முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 12 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் போட்டியின் முடிவு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்த போட்டியில் இருந்து சிறந்த விஷயத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கு நாம் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எங்கள் அணி பவுலர்கள் 15 ஓவர் வரை நன்றாக பந்து வீசி ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இறுதி கட்ட ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். இனிவரும் போட்டிகளில் நாங்கள் இந்த தவறை செய்யாமல் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன்.
எங்களுடைய பேட்டிங்கில் வார்னர்,மார்ஷ் ஜோடி தொடக்கத்தில் அபாரமாக விளையாடி நல்ல அடித்தளத்தை கொடுத்தனர். நாங்கள் விக்கெட்டுகளை தற்காத்துக் கொண்டு பின் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இறுதி கட்ட ஓவர்களில் நிறைய ரன்கள் தேவைப்பட்டதால் எங்களால் அதனைத் துரத்த முடியவில்லை.
தென்னாப்பிரிக்க வீரர் நோக்கியாவை நான் கடைசி ஓவர்களில் பயன்படுத்த தான் திட்டமிட்டு இருந்தேன். அதனால்தான் ரியான் பராக் பேட்டிங் செய்யும்போது நாங்கள் ஓவர் வழங்கவில்லை. எனினும் இன்றைய ஆட்டத்தில் நோக்கியா அதிக ரன்கள் கொடுத்துவிட்டார். டி20 கிரிக்கெட்டில் இப்படியும் நடக்கும்.இனிவரும் போட்டிகளில் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று பண்ட் கூறியுள்ளார்.