சென்னை: வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தின் மூலமாக அதிக தொகைக்கு செல்வதை தடுக்க இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் சில ஐடியா-க்களை அளித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். அதேபோல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் உள்ளனர்.

இதற்கு முன் கடந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் சாம் கரண் ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இதற்கு இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாததே முக்கிய காரணமாக உள்ளது. ஏனென்றால் இந்திய அணி வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்பதால், அனைத்து அணிகளும் சில வீரர்களுக்கு மட்டுமே பெரிய தொகையை அளிக்க முன்வரும்.
ஆனால் மினி ஏலத்தில் தேவைக்கேற்ப மட்டுமே வீரர்கள் வாங்கப்படும் என்பதால், வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனையறிந்து மெகா ஏலத்தில் பங்கேற்காமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் வேண்டுமென்றே மினி ஏலத்தில் பங்கேற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்வின், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது புதிய ட்ரெண்டாகி வருகிறது. இதனை வெளிநாட்டு வீரர்களும், அவர்களின் மேனேஜர்களும் அறிவுப்பூர்வமாக பயன்படுத்தி அதிக தொகையை கைப்பற்றி வருகின்றனர். இதனை தடுக்க 2 வழிகளை தீர்வாக நினைக்கிறேன்.
அதில் முதல் தீர்வு என்னவென்றால், மெகா ஏலத்தில் அந்த வீரர் என்ன தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ, அதே தொகைக்கு தான் மினி ஏலத்திலும் வாங்கப்பட வேண்டும் என்று விதிகளை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் சிறப்பாக செயல்படாத வீரர்கள் தான் அணிகளால் விடுவிக்கப்பட்டு மினி ஏலத்திற்கு வருவார்கள். இதன் மூலமாக தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்கும் சிறப்பான தொகையை அளிக்க முடியும்.
அதேபோல் மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்திற்கு நேரடியாக பங்கேற்றால், அவர்களின் ஏலத் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கோலை நிர்ணயிக்க வேண்டும். ஏற்கனவே தங்களது அணியில் உள்ள வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அதிக தொகை வரை மட்டுமே மினி ஏலத்தில் புதிதாக வாங்கப்படும் வீரருக்கும் ஏலம் செல்ல வேண்டும் என்று விதிகளை கொண்டு வரலாம். அதற்கு மேல் ஏலம் சென்றால், மீதமுள்ள தொகையை பிசிசிஐ-க்கு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.