சென்னை: நியூசிலாந்து அணியை சேர்ந்த 4 வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பவல் முதல் வீரராக விடப்பட்டார். அவரை ராஜஸ்தான் அணி ரூ.7.40 கோடிக்கு வாங்கியது.

இதன்பின் சிஎஸ்கே அணியின் தரப்பில் டிராவிஸ் ஹெட்டை வாங்க முயற்சிகள் நடத்தப்பட்டது. ஆனால் அவரை வாங்க முடியவில்லை என்பதால், ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடிக்கு வாங்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளார். அவரை சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு வாங்கியுள்ளது.
இவரை தொடர்ந்து பேட் கம்மின்ஸை வாங்க ஆரம்பக்கட்ட முயற்சிகள் நடந்தது. ஆனால் அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால், பின் வாங்கியது. ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பாதி ராயுடுவுக்கான மாற்று வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அதற்கேற்ப உலகக்கோப்பை தொடரில் வெளுத்து கட்டிய நியூசிலாந்து அணி வீரரான டேரல் மிட்சலை ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் ராயுடுவின் இடத்தில் டேரல் மிட்சல் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டேரல் மிட்சலை சிஎஸ்கே அணி விலை கொடுத்து வாங்க பயிற்சியாளர் பிளெமிங் காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே நியூசிலாந்து அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு ஆடிய வரும் சான்ட்னர் மற்றும் கான்வே-யை பயிற்சியாளர் பிளெமிங் தான் கொண்டு வந்தார். அதேபோல் இன்றைய ஏலத்தில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரல் மிட்சல் இருவரையும் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் 4 நியூசிலாந்து அணி வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.