சென்னை : ஐபிஎல் பைனலில் தோல்வியடைந்த ஐதராபாத் அணியின் ஓய்வறைக்கே சென்று அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஊக்கம் கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் பைனலில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் கேகேஆர் அணி 10.3 ஓவர்களில் சேஸிங் செய்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து பார்த்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார். கேமரா அவர் பக்கம் திரும்புவதை அறிந்து, பின்பக்கமாக திரும்பி காவ்யா மாறன் அழுதது ரசிகர்களை உலுக்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஓய்வறைக்கு சென்று காவ்யா மாறன் ஊக்கம் கொடுத்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மார்க்ரம் இருவருடன் காவ்யா மாறன் பேசினார். அதன்பின் அணியினர் முன் பேசுகையில், நீங்கள் ஒவ்வொருவரும் ஐதராபாத் அணியை பெருமை கொள்ள செய்துள்ளீர்கள். டி20 கிரிக்கெட் ஆடும் ஸ்டைலை மாற்றியுள்ளீர்கள்.
நாம் தோல்வியடைந்த போது நம்மை பற்றி அனைவரும் பேசுகிறார்கள். மோசமான நாள் என்பது யாருக்கு வேண்டுமானாலும் அமையும். நமக்கு இன்று மோசமான நாளாக அமைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு வீரரும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டீர்கள். கடந்த சீசனில் கடைசி இடத்தில் முடித்த போது, இந்த சீசனில் லட்சக்கணக்கான ரசிகர்கள் நமக்காக வந்தனர்.
அதற்கு உங்களின் திறமை தான் காரணம். கேகேஆர் அணி வென்ற போது, நமது ஆட்டத்தின் ஸ்டைலை பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் நன்றி.. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள். சோகமாக இருக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலும் ஓய்வறைக்கு சென்று வீரர்களை சந்திக்கும் பழக்கம் காவ்யா மாறனுக்கு கிடையாது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின் காவ்யா மாறன் நேரடியாக கம்மின்ஸ், மார்க்ரம் மற்றும் வீரர்களை சந்தித்து ஊக்கம் அளித்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.