பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அணி என்றால் அது சிஎஸ்கே தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி எந்த மைதானத்திற்கு சென்று விளையாடினாலும் அங்கு சொந்த அணியின் ரசிகர்களை விட சிஎஸ்கே ரசிகர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.
சிஎஸ்கே அணிக்கு கொஞ்சமும் சளைக்காத வண்ணம் ஆர்சிபி ரசிகர்களும் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் ஆர்சிபி ரசிகர்கள் கெத்து காட்டுவார்கள். இந்த நிலையில் மகளிர் ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் ஆடவர் அணி 16 சீசன்களாக ஒன்றும் செய்யாமல் இருக்கின்றது.

தற்போது ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நல்ல வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதால் இன்றைய ஆட்டத்தில் ஆர் சி பி அணி வெற்றி பெரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும் ஆர்சிபி அணி ரசிகர்கள் ஓவராக வாய் பேசி மற்ற அணி ரசிகர்களை வம்பு இழுப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால் ஆர் சி பி ரசிகர்களை எங்கு பார்த்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் எப்படி கில்லி திரைப்படத்தில் வேலு முத்துப்பாண்டி கோட்டைக்கே சென்று சண்டை போடுவாரோ, அதேபோல் ஆர்சிபி கோட்டைக்கு சென்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆர் சி பி ரசிகர்களை கிண்டல் செய்து இருக்கிறார்கள். சின்னசாமி மைதானத்திற்கு முன் திரண்ட சிஎஸ்கே ரசிகர்கள், ஆர் சி பி வீரர்களை பார்த்து ஈ சாலா கப்பு! லாலி பப்பு என்று சொல்லி கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
அதாவது இம்முறை உங்களுக்கு கோப்பை கிடையாது, வெறும் லாலிபாப் தான் என்று கூறி சிஎஸ்கே ரசிகர்கள் தெனாவட்டாக பேசியிருக்கிறார்கள். சிஎஸ்கே ரசிகர் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால் இதற்கு முன் ஆர் சி பி ரசிகர்கள் என்னென்ன சேட்டை செய்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் கூட ஆர் சி பி ரசிகர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக மைதானத்தை நோக்கி வந்திருக்கிறார்கள். அப்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க விதமாக தான் இன்று சிஎஸ்கே ரசிகர்களும் கத்தி இருக்கிறார்கள்.