மும்பை : ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர் மற்றும் சிவம் துபே ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்படும் நிலையில், 6வது முறையாக கோப்பையை வென்று தோனிக்கு மறக்க முடியாத ஃபேர்வெல்லை சக வீரர்கள் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்ப ஏலத்திலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இருப்பினும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர் இருவரும் காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தனர். என்சிஏ-வுக்கும் செல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருவரும் வீட்டில் ஓய்வில் ஈடுபட்டது விவாதத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் இருவரின் ஓய்வுக்கு காரணம் புரியாமல் குழம்பினர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இளம் வீரர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற எச்சரிக்கை விடுத்த நிலையில், கடைசி லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்காகவும், ஷர்துல் தாக்கூர் மும்பை அணிக்காகவும் களமிறங்கினர்.
சர்வீஸஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி களமிறங்கியது. இதில் மும்பை அணிக்காக ஆடிய ஷர்துல் தாக்கூர், 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதேபோல் அதிரடி வீரரான சிவம் துபே அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 140 பந்துகளில் 5 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 121 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்துள்ளர். இதன் மூலம் சென்னை அணியில் ரஹானே மட்டுமே ஃபார்மின்றி தவித்து வருகிறார். அவரும் எப்படியும் சிஎஸ்கே பயிற்சி முகாமில் ஃபார்முக்கு வருவார் என்று நம்பப்படும் சூழலில், சிஎஸ்கே அணி 6வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது.