சென்னை : 12 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியான நிலையில் அதில் மே மாதம் 26 அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2011 மற்றும் 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று இருந்தது. அதன் பின் இதுவரை அங்கே இறுதிப் போட்டி நடைபெறவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் பிசிசிஐ சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடத்த முன் வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பை வெல்கிறதோ, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அந்த அணியின் மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டு வருகிறது. 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றதால் ஐபிஎல் தொடரில் அந்த அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் இறுதிப் போட்டியை நடத்தப் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.
இதுவரை சென்னையில் நடந்த இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் சிஎஸ்கே அணி ஆடி இருக்கிறது. அந்த இரண்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. 2011இல் நடந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, சிஎஸ்கே அணி வீழ்த்தி இருந்தது. ஆனால், சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2012 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது.
தற்போது 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆட வாய்ப்பு உள்ளது. அதற்கு சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி பிளே-ஆஃப் சென்று பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அது மட்டுமின்றி இந்த ஆண்டுடன் தோனி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் சிஎஸ்கே அணி சென்னையில் இறுதிப் போட்டியில் ஆடுவது சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.