சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்று கேகேஆர் அணி பெருமை சேர்த்திருக்கிறது.
இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணி தவறவிட்டது. இந்த நிலையில் போட்டி முடிவு அடைந்தவுடன் பிசிசிஐ செயலாளர் என்ற முறையில் ஜெய்ஷா சாம்பியன் பட்டம் வெல்லும் அணியினரை சந்தித்து பேசுவது வழக்கம்.

ஆனால் கே கே ஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ், ஜெய்ஷாவை கண்டு கொள்ளாமல் சென்றிருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு காரணம் பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயரை ஜெயிஷா தான் நீக்கினார். இதனால் தான் ஜெயிஷாவை கண்டுகொள்ளாமல் ஸ்ரேயாஸ் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு முன் நடைபெற்ற சில விஷயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதாவது கே கே ஆர் அணியின் மென்டராக இருக்கும் கம்பீர் தேடி சென்று ஜெய்ஷாவை சந்தித்தார். மேலும் இருவரும் கைகுலுக்கி தங்களுடைய மரியாதையை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் கௌதம் கம்பீரை இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூறி பிசிசிஐ கம்பீரிடம் பேசியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கம்பீர் ஜெய்ஷாவை தேடி சந்தித்து இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இதனால் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளராக தன்னுடைய திறமையை கம்பீர் ஐபிஎல் கோப்பையில் வென்று நிரூபித்திருக்கிறார். இதனால் அவருக்கு தான் அந்த பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.