சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் விருந்து படைத்து வந்த இந்த தொடரில், இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியங்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.
இந்த தொடரை கொல்கத்தா அணி 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும் சன்ரைசர்ஸ் 17 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதன் பிறகு பத்து ஆண்டுகளாக அந்த அணி ஒரு முறை தான் இதுவரை இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

தொடர்ந்து இரண்டு சீசன்களாக ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது கம்பீரின் வருகைக்கு பிறகு பட்டையை கிளப்பி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதேபோன்று சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதன் பிறகு அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
2021 ஆம் ஆண்டு சீசனில் கடைசி இடத்திலும், 2022 ஆம் ஆண்டு சீசனில் எட்டாவது இடத்திலும், 2023 சீசனில் மீண்டும் கடைசி இடத்திலும் சன்ரைசர்ஸ் இருந்தார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக வந்த பிறகு சன்ரைசர்ஸ் எழுச்சி பெற்று தற்போது சிங்க நடை போட்டு வருகிறது. பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வந்தாலும், பந்து வீச்சிலும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.
நடப்புத் தொடரில் மட்டும் இரு அணிகளும் இரண்டு முறை மோதி இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளுமே கே.கே.ஆர் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா மைதானத்தில் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப் பரிட்சை நடத்தினர். இதில் ஆண்டிரூ ரஸில், அதிரடி ஆட்டத்தால் 208 ரன்கள் எடுத்தது.
இன்னும் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக விளையாடி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இரு அணிகளும் குவாலிபையர் ஒன் போட்டியில் அகமதாபாத்தில் விளையாடினார்கள். இதில் கே கே ஆர் அணி 38 பந்துகள் எஞ்சிய நிலையில்,வெற்றியை உறுதி செய்தது.
கொல்கத்தா அணியில் மிட்செல் ஸ்டார்க் சன்ரைசர்ஸ் அணியின் சக நாட்டு வீரரான டிராவிஸ் ஹேட்டை இரண்டாவது பந்தில் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதே போல் ஒரு சம்பவத்தை அவர் மீண்டும் இறுதிப் போட்டியில் செய்தால், கே கே ஆர் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இதுவரை ஏழு சீசன்களில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளும், அவர்களுக்குள் அந்தந்த சீசன்களில் சந்தித்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றவர்களே ஆறு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான் புனே அணியிடம் 2017 ஆம் ஆண்டு பூஜ்ஜியத்துக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வி பெற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சன்ரைசர்ஸ் அணி மும்பை செய்த சாதனையை செய்யுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு சாதகமாக தான் இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் எந்த அணி தலை சிறந்த ஸ்பின்னர் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இது சென்னையில் 2012 ஆம் ஆண்டு கேகேஆர் அணி கம்பீர் தலைமை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இது சென்னையில் 2012 ஆம் ஆண்டு கேகேஆர் அணி கம்பீர் தலைமையில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.