IPL 2024 : முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை
காத்மாண்டு : நேபாள நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சேனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம். இவர் முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஆவார்.
நேபாள அணியின் சுழற் பந்துவீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான சந்தீப் லாமிச்சேன் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பை அறிவித்தது, அதில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனி நீதிபதி பெஞ்ச், அவருக்கு ரூ. 3,00,000 அபராதம் விதித்தது, மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2,00,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த குற்றச்சாட்டின் காரணமாக லாமிச்சேனுக்கு எதிராக காத்மாண்டு காவல்துறையால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை நேபாள அணியின் கேப்டன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தது. அப்போது அவர் பேஸ்புக்கில் தான் நிரபராதி என்றும், நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறி இருந்தார்.
அவர் மீது வழக்கு நடந்த நிலையில், சில காலம் மட்டும் கிரிக்கெட் அணியில் இருந்து ஒதுக்கி வைத்த நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை மீண்டும் போட்டிகளில் ஆட அனுமதித்தது. அதுவும் சர்ச்சையாக மாறியது. தற்போது மீதான குற்றச்சாட்டு கீழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. லாமிச்சேனின் வழக்கறிஞர் சரோஜ் கிமிரே, "உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" எனக் கூறி இருக்கிறார். எனினும், சிறையில் இருந்தே அவர் வழக்கை நடத்த முடியும்.


Click it and Unblock the Notifications