சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு மிகமுக்கிய காரணமாக சுந்தர் ராமன் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தரப்பில் ராயுடு, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோருக்கு மாற்று வீரராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை சிஎஸ்கே அணி வாங்கியது.

அதேபோல் சிஎஸ்கேவின் சிங்கமான ஷர்துல் தாக்கூர், இளம் வீரரான சமீர் ரிஸ்வி, முஷ்டாஃபிகுர் ரஹ்மான், அவினாஷ் ராவ் உள்ளிட்டோர் வாங்கப்பட்டுள்ளனர். மொத்தமாக ரூ.31.4 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்ற சிஎஸ்கே அணி ரூ.30.4 கோடி செலவு செய்து சிறப்பான வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் மட்டுமல்லாமல் ரசிகர்களும் நிறைவாக உள்ளனர்.
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் பயிற்சியாளர் பயிற்சியாளர் ஸ்டீஃபென் பிளெமிங், சிஇஓ விஸ்வநாதன், ஜேஎஸ்கே டிஓசி அன்கித் பல்தி, அனாலிஸ்ட் லக்ஷு மற்றும் முன்னாள் ஐபிஎல் சிஓஓ சுந்தர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் பெரும்பாலான முடிவுகளை முன்னாள் சிஓஓ-வான சுந்தர் ராமன் எடுத்ததை கவனிக்க முடிந்தது.
2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறிய போது, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடனடியாக ஐபிஎல் தொடரின் முன்னாள் சிஓஓ-வான சுந்தர் ராமனை சிஎஸ்கே அணியின் ஆலோசகராக நியமனம் செய்தார். அதன்பின் சிஎஸ்கே அணியுடன் இணைந்த சுந்தர் ராமன், வீரர்களின் ஏலத்தில் தொடங்கி அணி நிர்வாகத்தின் சில அணுகுமுறையிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக உடனடியாக சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இவரின் வருகைக்கு பின் 3 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் எஸ்ஏ20 லீக் தொடரில் விளையாடி வரும் ஜேஎஸ்கே அணியின் 12.5 சதவிகித பங்குகள் சுந்தர் ராமனிடம் தான் உள்ளது. இன்றைய ஏலத்தின் போதும் சிஎஸ்கே அணியின் மூளையாக சுந்தர் ராமன் சிறப்பாக செயல்பட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.