பெங்களூர் : ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கட்டியணைத்து நட்பு பாராட்டிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களமிறங்கியது. இந்த போட்டிக்கு முன்பாக கவுதம் கம்பீர், எனது கனவில் கூட தோற்கடிக்க நினைக்கும் ஒரு அணி என்றால் அது ஆர்சிபி தான். அவர்கள் இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த கோப்பையையும் வென்றதில்லை. ஆனால் அவர்களின் ஆட்டிட்யூட் ஏதோ அனைத்து கோப்பைகளையும் வென்றதை போல் விளையாடுவார்கள்.

அந்த ஆட்டிட்யூடை என்னால் கொஞ்சம் கூட சகித்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலேயே கம்பீரின் இந்த பேட்டி வெளியானதால், ஆர்சிபி ரசிகர்கள் கம்பீரை பொளந்து கட்டி வருகின்றனர். கடந்த முறை பெங்களூர் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
அப்போது கவுதம் கம்பீர் சைலன்ஸ் என்று வாயில் கை வைத்து ரசிகர்களுக்கு காட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லக்னோ மைதானத்தில் வைத்து விராட் கோலி மரண மாஸ் சம்பவத்தை செய்தார். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் கடைசியில் கவுதம் கம்பீர் நேரடியாக விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டார். ஐபிஎல் வரலாற்றில் இது மிக முக்கிய சம்பவமாக மாறியது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி - கம்பீர் இடையிலான சந்திப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 16வது ஓவருக்கு பின் டைம் அவுட் கொடுக்கப்பட்ட நிலையில், விராட் கோலி சக வீரர்களுடன் இணைந்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கேகேஆர் அணி வீரர்களுக்கு திட்டங்களை விவரிக்க கவுதம் கம்பீரே நேரடியாக மைதானத்திற்குள் வந்தார். அப்போது கம்பீரை பார்க்காமல் எதிர்முனையில் திரும்பி நின்றிருந்த விராட் கோலியை அழைத்த கம்பீர், உடனடியாக அவரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார். சில நிமிடங்கள் சிரித்து கொண்டு, நலம் விசாரித்து கொண்டனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே லக்னோ அணியின் நவீன் உல் ஹக்கை உலகக்கோப்பை தொடரின் போதே அழைத்து கட்டியணைத்து நட்பு பாராட்டினார் விராட் கோலி. தற்போது 2 மாத இடைவேளைக்கு பின் விராட் கோலி களம் திரும்பியதால், கவுதம் கம்பீர் நேரடியால நலம் விசாரித்திருக்கலாம் என்றும், 2வது குழந்தை பிறப்புக்கு வாழ்த்து கூறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.