அகமதாபாத் : குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை காட்டிலும் முகமது ஷமியை தான் அதிகம் மிஸ் செய்வதாக நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 சீசன்களில் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தது குஜராத் அணி. ஆனால் இந்த சீசனில் குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதற்கு குஜராத் அணியில் இருந்து விலகிய முன்னாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாததே முக்கிய காரணம் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது. இதனையொட்டி குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் பேசுகையில், இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சீனியர் வீரரான முகமது ஷமியை தான் அதிகம் மிஸ் செய்கிறோம். ஏனென்றால் கடந்த 2 சீசன்களிலும் முக்கிய ரோலை செய்தார்.
புதிய பந்து மற்றும் பழைய பந்திலும் குஜராத் அணிக்கு என்ன தேவையோ அதனை சிறப்பாக செய்து முடித்தார். அது எனக்கு மட்டுமல்லாமல் எங்கள் அணியின் மற்ற பவுலர்களுக்கும் பணியை எளிமையாக்கியது. இந்த சீசனையும் நாங்கள் பாசிட்டிவாக தான் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு வீரரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
சில முடிவுகள் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்றாலும், பவுலர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது தான். ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, ஒமர்சாய், உமேஷ் மற்றும் மோகித் யாதவ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். மேலும் குஜராத் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மிஸ் செய்யவில்லை என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது ஹர்திக் பாண்டியா வெறுப்பாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.