அகமதாபாத் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி தரப்பில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுமித் குமார் சேர்க்கப்பட்டார். அதேபோல் குஜராத் அணி தரப்பில் சாஹா, மில்லர், சந்தீப் வாரியர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார். சுப்மன் கில் பவுண்டரியுடன் தொடங்க, 2வது ஓவரை வீச இஷாந்த் சர்மா வந்தார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளை இஷாந்த் சர்மா இன்ஸ்விங்கர்களாக வீசினார். இதில் 4வது பந்தை பவுண்டரி அடித்த நிலையில், 5வது பந்தை கிராஸ் சீம் பிடித்து அவுட் ஸ்விங்கராக வீசினார்.
அந்த பந்தில் சுப்மன் கில் கவர் திசையில் நின்ற பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சாய் சுதர்சன் களமிறங்கி கலீல் அஹ்மத் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் 3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 23 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் 4வது ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரில் அடுத்தடுத்து சில டாட் பால்களை ஆடிய சாஹா, 5வது பந்தில் ஷாட் அடிக்க முயற்சித்து போல்டானார். தொடர்ந்து இஷாந்த சர்மா 5வது ஓவரின் முதல் பந்திலேயே சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ராகுல் டிவாட்டியா - அபினவ் மனோகர் கூட்டணி இணைந்தது. கலீல் அஹ்மத் வீசிய 6வது ஓவர் மெய்டனாகியது. இதனால் பவர் பிளே ஓவர்களில் குஜராத் அணி 30 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பின் மோசமான பவர் பிளே ஸ்கோரை குஜராத் அணி பதிவு செய்தது. அதேபோல் டெல்லி அணியின் எழுச்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.