அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் ஃப்ரேசர் மெக்குர்க் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்ததை கண்டு கங்குலி மிரண்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
என்னதான் டி20 கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தாலும், முதல் ஓவரில் சந்திக்கும் முதல் பந்தில் சிக்ஸ் அடிப்பது குறித்து பேட்ஸ்மேன்கள் பலரும் சிந்திக்க மாட்டார்கள். இதற்கு முன்பாக கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இப்படியான மரண மாஸ் சம்பவத்தை செய்திருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் ஃப்ரேசர் மெக்குர்க் தரமான சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணி தரப்பில் பிரித்வி ஷா - ஃப்ரேசர் மெக்குர்க் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். குஜராத் அணி தரப்பில் முதல் ஓவரை அறிமுக வீரர் சந்தீப் வாரியர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பிரித்வி ஷா ஒரு ரன் எடுத்து மறுபக்கம் செல்ல, இளம் வீரர் ஃப்ரேசர் மெக்குர்க் முதல் பந்தை எதிர்கொள்ள தயாரானார்.
இந்த நிலையில் சந்தீப் வாரியர் வீசிய 2வது பந்தில் நேராக சிக்சர் அடித்து மிரட்டினார். ஃப்ரேசர் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லி அணி நிர்வாகிகளையும் ஆச்சரியப்படுத்தியது. டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி எழுந்து நின்று சிரித்து கொண்டே தலையையாட்டி ரசித்தார்.
இதன்பின் மீண்டும் 4வது பந்தில் அதிரடியாக ஒரு பவுண்டரியை ஃப்ரேசர் அடிக்க, கேமரா இம்முறை டேவிட் வார்னர் பக்கம் திரும்பியது. அவரின் ஃப்ரேசரின் அதிரடியை சிரித்து கொண்டே ரசிக்க, டெல்லி அணி வீரர்கள் உற்சாகமாகினர். எந்த கவலையும் இன்றி அதிரடியாக ஆடிய ஃப்ரேசர் 10 பந்துகளில் 2 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 20 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.