அகமதாபாத் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக அறிமுகமான சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 17.3 ஓவர்களில் வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் சேர்த்து அபார வெற்றிபெற்றது. டெல்லி அணி தரப்பில் ஃப்ரேசர் 20 ரன்களையும் ஹோப் 19 ரன்களையும் சேர்த்தனர். இந்த போட்டியில் வென்றதன் மூலமாக டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் சந்தீப் வாரியர் குஜராத் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். இவரின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. குறைந்தபட்ச இலக்கு என்பதால், டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்பதை குஜராத் அணி அறிந்திருந்தது.
இதனால் முதல் ஓவர் ஸ்விங் செய்யக் கூடிய பவுலரான சந்தீப் வாரியரிடம் கொடுக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே 14 ரன்களை சந்தீப் வாரியர் விட்டுக் கொடுத்த நிலையில், 2வது ஓவரில் தரமான கம்பேக்கை கொடுத்தார். ஷார்ட் பால்களுக்கு பிரித்வி ஷா திணறுவார் என்பது உலகமே அறிந்த உண்மை. இதனை அறிந்து நல்ல வேகத்தில் அவருக்கு ஷார்ட் பாலை வீச, அதனை சற்றும் எதிர்பார்க்காத பிரித்வி ஷா 7 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து 3வது ஓவரையும் பவர் பிளேவிற்குள்ளாகவே வீச சந்தீப் வாரியர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 4, 6, 6, 1, 6 என்று 23 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனாலும் அசராமல் கடைசி பந்தில் தரமான யார்க்கர் மூலமாக அபிஷேக் பொரெல் விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். ரன்கள் செல்வதை பற்றி கவலைப்படாமல் சந்தீப் வாரியர் விக்கெட்டுக்காக முயற்சித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.