அகமதாபாத் : ரோஹித் சர்மா ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்த ஹர்திக் பாண்டியா, அடுத்ததாக தானாக போய் வாயைக் கொடுத்து குஜராத் மாநில மக்களின் அதிருப்தியையும் பெற்று இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. ஹர்த்திக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த அணி இரண்டு முறையும் ஐபிஎல் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஒரு முறை கோப்பையையும் கைப்பற்றி இருந்தது.

அதனால், தனது சொந்த மாநிலத்தில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவியதால் அவர்கள் அதிருப்தி அடைந்தாலும் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியலில் இருந்து நீக்கியதால் அவரது ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிய நிலையில் டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா பெயரைக் கூறிய போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனை அடுத்து பேசிய பாண்டியா, தான் பிறந்த இடம் குஜராத் என்றாலும் கிரிக்கெட்டில் தான் பிறந்தது மும்பை தான் எனக் கூறினார். அவரது பேச்சு குஜராத் மக்களை சீண்டும் வகையில் இருந்ததால் அவர்கள் பாண்டியாவுக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட்ட வண்ணம் இருந்தனர்.
ஹர்திக் பாண்டியா குஜராத் குறித்து பெருமையாக பேசி இருந்தால் அந்த மாநில ரசிகர்களையாவது தன் பக்கம் இருக்குமாறு செய்து இருக்கலாம். ஆனால், அவர்களையும் சீண்டி விட்டு இருக்கிறார். இன் அவர் எப்போது குஜராத்தில் கிரிக்கெட் ஆடினாலும் அவருக்கு எதிராக கூச்சல் கிளம்பும்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குஜராத் அணி வெற்றி பெற்ற நிலையில், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வியுடன் தொடரை தொடங்கி இருக்கிறார்.