அகமதாபாத் : மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது இனி மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் போட்டிகளை நேரில் காணச் செல்லும் ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை அணியின் ஜெர்ஸியை அணியக் கூடாது. அதற்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரோஹித் சர்மாவின் இந்திய அணி ஜெர்ஸியை அணிந்து செல்ல வேண்டும் என்பதே அந்த அதிரடி முடிவு.

இப்படி செய்வதன் மூலம் எத்தனை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும் என அவர்கள் கருதி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
2024 ஐபிஎல் ஏலத்துக்கு சில நாட்கள் முன்னதாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருந்தது மும்பை இந்தியன்ஸ். அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அணி மாற்றம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதில் ரோஹித் சர்மாவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தன்னை கேப்டனாக நியமித்தால் மட்டுமே தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அணி மாற ஒப்புக் கொள்வேன் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்ததாகவும் ஒரு தகவல் வலம் வந்தது.
சமீபத்தில் அது குறித்த கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட போது, ஹர்திக் பாண்டியா அதற்கு எந்த பதிலும் கூற மறுத்து விட்டார். அதில் இருந்தே அதில் சில உண்மைகள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த ரோஹித் சர்மா ரசிகர்கள், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் உடையை புறக்கணித்து ரோஹித் சர்மாவின் இந்திய அணி உடையை அணிய முடிவு செய்துள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்துக்கு உள்ளே ஆடும் ஆட்டத்தை விட களத்துக்கு வெளியே ரசிகர்களுடனும் ஒரு ஆட்டம் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அவர்களை சமாதானம் செய்யாவிட்டால் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கடும் அழுத்தத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.