அகமதாபாத் : ஒற்றை ஆளாக நின்று ஒரு ஆட்டத்தை என் அணிக்காக வெல்ல வேண்டும் என்ற கனவு தற்போது நிஜமாகியுள்ளதாக பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அகமதாபாத் மைதானத்தில் முதல்முறையாக குஜராத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடிய நிலையில், அசத்தலான வெற்றியை பெற்று மிரட்டியுள்ளது. பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது 10 ஓவர்கள் வரை ஆட்டம் குஜராத் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் 11வது ஓவருக்கு பின் ஷஷாங்க் சிங் மொத்தமாக ஆட்டத்தை மாற்றினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 61 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி வெல்ல வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்ட போட்டியை, அப்படியே தலைகீழாக மாற்றி வென்று கொடுத்துள்ளார் ஷஷாங்க் சிங்.
ஐபிஎல் ஏலத்தின் போது ஒரே பெயரில் இரு ஷஷாங்க் சிங் இருந்ததால், பஞ்சாப் அணி 18 வயது ஷஷாங்க் சிங்கிற்கு பதிலாக 32 வயது ஷஷாங்க் சிங்கை வாங்கியது. இதனையறிந்து ஷஷாங்க் சிங்கை திரும்ப பெறுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த போது, அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் ஷஷாங்க் சிங் தன்னை வாங்கியதே சரி என்று பஞ்சாப் அணிக்காக ஒரு போட்டியை தனியாளாக வென்று கொடுத்துள்ளார்.
இதனால் ஷஷாங்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்பின் ஷஷாங்க் சிங் பேசுகையில், இந்த வெற்றியை இன்னும் முழுமையாக ஏற்க முடியவில்லை. ஏனென்றால் இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன். இது நிஜமாகியது அற்புதமான உணர்வை கொடுக்கிறது. சாதாரண கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவதே எனது பலம்.
வழக்கமாக நம்பர் 7ல் தான் பேட்டிங் செய்து வந்தேன். ஆனால் இன்று நம்பர் 5ல் களமிறங்கி விளையாடினேன். இந்த பிட்சில் பவுன்ஸ் நன்றாக இருந்தது. அதேபோல் இரு அணிகளாலும் 200 ரன்களை சேர்க்க முடிந்ததன் மூலமாக பிட்ச் எப்படி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. ரஷீத் கான், உமேஷ் யாதவ், மோகித் சர்மா உள்ளிட்டோர் கிரிக்கெட் ஜாம்பவான்கள்.
நான் அவர்களின் பெயரை பார்க்கவில்லை. அவர்கள் வீசும் பந்துகளுக்கு ரியாக்ட் செய்து, அதற்கேற்ப ஷாட்களை ஆடினேன். கடந்த சில சீசன்களில் பெரியளவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் அணிக்காக விளையாடினேன். தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இது எனது மன உறுதியை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.