அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் 48 பந்துகளில் 4 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 89 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த ராகுல் டிவாட்டியா 8 பந்துகளில் 23 ரன்களை விளாசினார்.

இதன்பின் 200 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. குஜராத் அணியின் ஒமர்சாய் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி பேர்ஸ்டோவ் அதிரடியாக தொடங்கினார். ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியில் பொளந்து கட்டினார்.
உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் சிக்ஸ், பவுண்டரி உட்பட 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5 ஓவர்கள் முடிவில் 48 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது நூர் அஹ்மத் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்களில் போல்டாகினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங்கும் 24 பந்துகளில் 35 ரன்களிலும், சாம் கரன் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 71 ரன்களுக்கு பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் பஞ்சாப் அணி தரப்பில் ஷஷாங்க் சிங் களமிறக்கப்பட்டார். நேரடியாக நூர் அஹ்மத் பந்தில் சிக்சர் அடித்து ஷஷாங்க் சிங் அட்டாக் செய்ய, தொடர்ந்து உமேஷ் யாதவ் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டியது. இதன்பின் சிக்கந்தர் ராசாவும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ஜித்தேஷ் சர்மா களமிறக்கப்பட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் இருவருமே அதிரடியாக ரன்கள் சேர்க்க, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது ரஷீத் கான் வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார் ஜித்தேஷ் சர்மா. ஆனால் 3வது பந்தில் அவர் சிக்சர் அடிக்க முயற்சித்து 16 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக அஷுதோஷ் சர்மா களமிறங்கினார். இதன்பின் பஞ்சாப் அணி கடைசி 3 ஓவர்களில் வெற்றிபெற 41 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் 18வது ஓவரை வீச ஒமர்சாய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது.
இதனிடையே சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். தொடர்ந்து மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. பின்னர் கடைசி ஓவரை வீச தர்ஷன் நலகண்டே அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் அஷுதோஷ் சர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 4வது பந்தில் ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்தார். அதன்பின் 5வது பந்தில் ஒரு ரன் அடித்து ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 200 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.