அகமதாபாத் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரால் அவுட் கொடுக்கப்படாத போதும், தானாக முன் வந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் நடந்து வெளியேறியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் - சாஹா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சாஹா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் இணைந்த சுப்மன் கில் - வில்லியம்சன் கூட்டணி பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்திருந்த போது, ஹர்ப்ரீத் பரார் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் கேப்டன் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது.
குறிப்பாக சிக்கந்தர் ராசா வீசிய ஒரே ஓவரில் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினர். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை கடந்தது. பின்னர் ரபாடா வீசிய ஓவரில் கில் சிக்ஸ் அடிக்க, சாய் சுதர்சன் தன் பங்கிற்கு பவுண்டரியை விளாசி மிரட்டினார்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்சல் படேல் வீசிய ஸ்லோயர் பந்தில் 19 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஹர்சல் படேல் வீசிய ஷார்ட் பால் கொஞ்சம் மித வேகத்தில் வந்ததை அறிந்து, சாய் சுதர்சன் லெக் திசையில் அடிக்க முயற்சித்தார்.
ஆனால் அந்த பந்து சாய் சுதர்சன் பேட்டில் அடித்து விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைகளில் சிக்கியது. பவுலர் மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அவுட் என்று நடுவரிடம் அப்பீல் செய்ய, அவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் நடுவரின் தீர்ப்புக்கு காத்திருக்காமல் சாய் சுதர்சன் தானாக முன் வந்து களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் சாய் சுதர்சனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.