அகமதாபாத் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ஷாரூக் கான் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாஹா 5 ரன்களிலும், சுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் சாய் சுதர்சனுடன் ஷாரூக் கான் இணைந்தார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே டிஎன்பிஎல் தொடரில் கோவை கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். இதனால் குஜராத் அணியை மீட்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன்பின் கரண் சர்மா வீசிய 8வது ஓவரில் சாய் சுதர்சன் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க, மறுமுனையில் ஷாரூக் கான் மேக்ஸ்வெல் பவுலிங்கில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அட்டாக்கை தொடங்கினார்.
தொடர்ந்து கரண் சர்மாவின் பந்திலும் ஷாரூக் கான் சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் குஜராத் அணியின் கைகள் ஓங்கியது. இதன் காரணமாக குஜராத் அணியின் ஸ்கோர் 12 ஓவர்களிலேயே 108 ரன்களாக உயர்ந்தது. ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதால், உடனடியாக கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. கேமரூன் க்ரீனும் ஷார்ட் பாலை வீசி ஷாரூக் கானை அட்டாக் செய்தார்.
ஆனால் எதிர்பாராத வகையில் கேமரூன் க்ரீன் பவுலிங்கிலும் ஷாரூக் கான் அதிரடியாக 2 பவுண்டரிகள், ஒரு சிக்சரை அடித்து 24 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற ஷாரூக் கான் 30 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 58 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
குஜராத் அணிக்கு ஹிட்டர்கள் இல்லை என்று பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென உள்ளே வந்து ஷாரூக் கான் பொளந்து கட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக் கானின் ஆட்டத்தை பார்த்து ஓய்வறையில் எழுந்து நின்று குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா சூப்பர் என்று பாராட்டியுள்ளார்.