அகமதாபாத் : ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. குஜராத் அணி நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து வென்றுள்ளது. சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 10 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 100 ரன்களை விளாசினார்.

அதேபோல் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 70 ரன்களை விளாசினார். இதன் மூலமாக விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக முறை 500 ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னருடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது அணுகுமுறை விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் விராட் கோலி பேசுகையில், வில் ஜாக்ஸின் சதம் தனித்துவமிக்கது. அவர் தொடக்கத்தில் சரியாக பந்தை டைமிங் செய்ய முடியவில்லை. ஆனால் களத்தில் நாங்கள் நிதானமாக விளையாடலாம் என்று முடிவு செய்து எங்களை நாங்களே பேக் செய்தோம்.
ஏனென்றால் அவரால் சரியாக அடிக்க முடிந்தால், எவ்வளவு அபாயகரமான வீரர் என்பது தெரியும். மோகித் சர்மா ஓவரில் ஜாக்ஸ் சிக்சர் அடித்த பின், எனது ரோல் மொத்தமாக மாறிவிட்டது. அவரின் அதிரடியை எதிர்முனையில் நின்று பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. 19வது ஓவரில் தான் வெல்வோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 16வது ஓவரிலேயே வெற்றியை பெற்றது நிச்சயம் அசாத்தியமான திறமை தான். டி20 கிரிக்கெட்டில் நான் பார்த்த வரையில், இது மகத்தான சதம் என்று சொல்வேன்.
2வது பாதியில் பிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது. இதன் காரணமாகவே இரு அணிகளும் 2வது பேட்டிங் செய்ய நினைத்தனர் என்று கருதுகிறேன். வெப்பம் குறைந்து, கொஞ்சம் ஈரம் வரத் தொடங்கியதும், பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. தேவையான நேரத்தில் பவுண்டரி அடித்தது ஜாலியாக இருந்தது. இந்த இன்னிங்ஸில் 10 ரன் ரேட்டிற்கு மேல் ஆட்டத்தை கொண்டு செல்லவில்லை. அதேபோல் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் பலரும் எனது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான எனது ஆட்டம் குறித்து அதிகமாக பேசி வருகிறார்கள்.
ஆனால் என்னை பொறுத்தவரை அணிக்காக வெற்றிபெற்று கொடுப்பதே முக்கியம். அப்படி செய்ததன் காரணமாகவே 15 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் நான் இருக்கிறேன். எங்களின் சூழலில் நீங்கள் இருந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை மக்கள் நாள் முழுவதும் அவர்களின் அனுமானங்களை பேசி வருகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டை அருகில் இருந்து பார்க்கும் அனைவருக்கும் என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும்.
இந்த சீசனில் நாங்கள் சுயமரியாதைக்காகவும், ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறோம். முதல் பாதியில் விளையாடியதை போல் மீண்டும் விளையாட மாட்டோம். எங்களால் பந்தை நன்றாக பார்த்து அட்டாக் செய்ய முடிகிறது. ஃபீல்டிங்கில் பாய்ந்து பந்தை தடுக்க முயற்சிக்கிறோம். எங்களின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. இப்போது இதே போன்ற ஆட்டத்தை தொடர விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.