அகமதாபாத் : குஜராத் அணியின் நட்சத்திர பவுலர்களான மோகித் சர்மா மற்றும் ரஷீத் கான் இருவரின் பவுலிங்கில் வில் ஜாக்ஸ் ருத்ர தாண்வம் ஆடியதை பார்த்து விராட் கோலி வாயடைத்து போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 16 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர்களான மோகித் சர்மா மற்றும் ரஷீத் கான் இருவரையும் வில் ஜாக்ஸ் அட்டாக் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் டூ பிளசிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, வில் ஜாக்ஸ் களம் புகுந்தார். அவர் வந்த போது உடனடியாக ஸ்பின்னர்களை வைத்து குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் அட்டாக் செய்தார்.
இதனால் வில் ஜாக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 17 பந்துகளில் வில் ஜாக்ஸ் 17 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், மோகித் சர்மா பவுலிங்கில் சிக்சர் அடித்து அதிரடியை தொடங்கினார். அதன்பின் ஸ்பின்னர்களான சாய் கிஷோர் மற்றும் நூர் அஹ்மத் பவுலிங்கில் சிக்சரை அடிக்க, 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இந்த நிலையில் 14வது ஓவரை வீச மோகித் சர்மா வந்த போது 4, 6, 6, 2, 6, 4 என்று மொத்தமாக 29 ரன்களை விளாசினார். இதன்பின் ஆட்டம் கையை விட்டு செல்வதை அறிந்து உடனடியாக ரஷீத் கான் அட்டாக்கில் வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஒரு ரன்னை எடுத்துவிட்டு மறுமுனைக்கு செல்ல, வில் ஜாக்ஸ் வந்து 6, 6, 4, 6, 6 என்று மிரட்டினார்.
உலகின் தலைசிறந்த டி20 பவுலரான ரஷீத் கானை அசால்ட்டாக வில் ஜாக்ஸ் அட்டாக் செய்ததை பார்த்து விராட் கோலி வாயடைத்து சிரித்து கொண்டே களத்தில் வியந்தார். இந்த ஓவரில் 28 ரன்களை விளாசியதன் மூலமாக வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் சதத்தையும் எட்டினார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.