அகமதாபாத் : ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் கிளாசனை வீழ்த்துவதற்காக ரஷீத் கானை வைத்து சுப்மன் கில் செய்த மேஜிக் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது கிளாசனை வீழ்த்துவதற்காக பும்ராவை தாமதமாக அட்டாக்கில் கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால் கிளாசன் வருவதற்கு முன்பாகவே ஐதராபாத் அணி தரமான சம்பவத்தை நிகழ்த்தியதால், கடைசி நேரத்தில் வந்து பும்ராவை சேர்த்து பொளந்து கட்டினார் கிளாசன். இதனால் ஹர்திக் பாண்டியாவின் திட்டம் பலிக்காமல் போனது.

இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. அப்போது நட்சத்திர வீரர் எய்டன் மார்க்ரம் உடன் அதிரடி வீரர் கிளாசன் கூட்டணி சேர்ந்தார். அவர் வந்த பின் எந்தவித பயமும் இல்லாமல் நூர் அஹ்மத்தை வைத்து சுப்மன் கில் அட்டாக் செய்தார்.
முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தாலும், சுப்மன் கில் பின் வாங்கவில்லை. பின்னர் வழக்கம் போல் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான மோகித் சர்மா 12வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரிலும் கிளாசன் பெரிய ஷாட் ஆடாமல் தவிர்த்த நிலையில், மீண்டும் நூர் அஹ்மத்தை வைத்து அட்டாக் செய்தார். அந்த ஓவரில் கிளாசன் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடிக்க, ஐதராபாத் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
இந்த நிலையில் டைம் அவுட் கொடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக ரஷீத் கான் அட்டாக்கில் வந்தார். முதல் ஸ்பெல்லில் 2 ஓவர்களை மட்டும் வீசிய ரஷீத் கான், கிளாசனுக்காக பதுக்கி வைக்கப்பட்டார். சரியாக கிளாசன் அடிக்க தொடங்கியதும் அட்டாக்கில் வந்த நிலையில், அந்த ஓவரின் 4வது பந்தில் கிளாசன் போல்டாகி 24 ரன்களில் வெளியேறினார்.
இதன் மூலமாக ரஷீத் கானை வைத்து கிளாசனை வீழ்த்த சுப்மன் கில் மற்றும் நெஹ்ரா தீட்டிய திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை பாராட்டி வருகின்றனர். ஸ்பின்னர்களின் பந்துகளை வெளுத்து கட்டி வந்த கிளாசனை எதிர்த்து தைரியமாக 3 ஓவர்கள் ஸ்பின் வீசி சுப்மன் கில் அட்டாக் செய்தது தான் அவர் கேப்டனாகவும் முன்னேறி இருப்பதை காட்டுவதாக பாராட்டி வருகின்றனர்.