IPL 2024 : சரியாக ஐபிஎல்-க்கு முன் நடந்த மோதல்.. கதிகலங்கிப் போன குஜராத் டைட்டன்ஸ்.. தப்பிய ராபின்
ராஞ்சி : 2024 ஐபிஎல் ஏலத்தில் ராபின் மின்ஸ் என்ற ஜார்கண்ட் மாநில வீரரை சுமார் 3.6 கோடி கொடுத்து வாங்கி இருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அவர் மீது எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சரியாக ஐபிஎல் தொடர் துவங்க மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் பைக் விபத்து ஒன்றில் சிக்கி இருக்கிறார் ராபின் மின்ஸ்.
நல்ல வேளையாக ராபின் மின்ஸ்-க்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அவர் பைக்கில் சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் கீழே சரிந்து இருக்கிறார். அதனால் காலில் சிராய்ப்புகள் ஏற்பட்டது. இதை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட்டார் என அவரது தந்தை தெரிவித்தார்.

அவரது சூப்பர் பைக்கின் முன் பகுதி இந்த விபத்தில் மோசமாக சேதமடைந்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடர் இருக்கும் போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் குஜராத் அணி நிர்வாகம் பரபரப்படைந்து இருக்கிறது. ராபின் மின்ஸ் முக்கிய வீரர் இல்லை என்றாலும் அவரை இடையே சில போட்டிகளில் பயன்படுத்த திட்டமிட்டே ஏலத்தில் குஜராத் அணி அவரை 3.6 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
இத்தனைக்கும் ராபின் மின்ஸ் தனது மாநில அணிக்காக ரஞ்சி ட்ராபி தொடரில் கூட ஆடவில்லை. ஜார்கண்ட் அண்டர் 19 மற்றும் அண்டர் 25 அணிகளில் மட்டுமே இடம் பெற்று இருந்தார். அந்த அணிகளில் அவரது செயல்பாட்டை பார்த்து பல அணிகள் 2024 ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்க போட்டி போட்டன. மாநில அளவிலான உள்ளூர் தொடர்களில் கூட பெரிய அளவில் ஆடி இருக்காத ராபின் மின்சை வாங்க 2024 ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. அதன் முடிவில் 3.6 கோடி என்ற பெரிய தொகையை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை வாங்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறை சுப்மன் கில் கேப்டன்சியில் களமிறங்க உள்ளது. அவருக்கு கேப்டனாக இதுவே முதல் அனுபவம் ஆகும்.


Click it and Unblock the Notifications