மும்பை : ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு அணி ட்ரேடிங் மூலம் அணி மாற்றம் செய்யும் முயற்சியில் இருந்த போது அவர் தன்னை கேப்டனாக நியமித்தால் தான் மும்பை அணிக்கு வருவேன் எனக் கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே ஹர்திக் பாண்டியா தனது விருப்பத்தை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கூறி இருக்கிறார். தனக்கு கேப்டன் பதவி வழங்காவிட்டால் அணி மாற முடியாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இத்தனைக்கும் ரோஹித் சர்மா தான் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் என முடிவு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தும் ஹர்திக் பாண்டியா தனது கோரிக்கையை முன் வைத்து மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு கீழ் ஆடினாலும், ஐபிஎல் அணியில் அவருக்கே கேப்டன் ஆக வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்து இருக்கிறார்.

அவர் கொடுத்த அழுத்தத்தை அடுத்து, எப்படியும் அடுத்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கித் தான் ஆக வேண்டும். அதை இப்போதே செய்து விடலாம் என முடிவு செய்து ரோஹித் சர்மாவிடம் மும்பை அணி நிர்வாகம் பாண்டியாவின் விருப்பத்தை பற்றி 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே தெரிவித்து இருக்கிறது. அதற்கு ரோஹித் சர்மா அணி நிர்வாகத்தின் முடிவுக்கே இந்த விவகாரத்தை விட்டு விடுவதாக கூறி ஒதுங்கி இருக்கிறார். இது குறித்த விவரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என வரிசையாக பார்க்கலாம்.
முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, தங்கள் அணிக்கு வாங்க முயற்சி செய்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அவர் குஜராத் அணி உரிமையாளர்களுடன் விளம்பர வருமானப் பகிர்வு குறித்து அதிருப்தியில் இருந்ததை மும்பை அணி பயன்படுத்திக் கொண்டதாக ஒரு தகவல் உள்ளது.
ஒரு வழியாக 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு மாற்ற குஜராத் அணியை ஒப்புக் கொள்ள வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி ஆனால், பாண்டியா மும்பை அணிக்கு வர வேண்டும் என்றால் கேப்டன் பதவி தர வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
அப்போதே ரோஹித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் அவர் பதவி விலக வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாத ரோஹித் சர்மா, அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கே இந்த விஷயத்தை விட்டு விடுவதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில், பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அளிக்க ஒப்புக் கொண்டு, குஜராத் அணிக்கு பணத்தை கொடுத்து அவரை தங்கள் அணிக்கு மாற்றி இருக்கிறது மும்பை அணி.
அதன் பின் தற்போது 2024 ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக நியமிக்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அதே நேரம் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
ரோஹித் சர்மா என்ன மனநிலையில் அணி நிர்வாகம் முடிவு எடுத்துக் கொள்ளட்டும் எனக் கூறினார் என்பது தான் இதில் மர்மமாக உள்ளது. மொத்தமாக நடந்ததையும், பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கும் போது ஒன்று ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதில் விருப்பம் இல்லை அல்லது ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் விருப்பம் இல்லை என தெரிகிறது.