மும்பை : கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டி வரை கூட முன்னேறவில்லை. ஒரு முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இந்த நிலையில் தான் தங்கள் அணிக்கு கோப்பை பெற்றுத் தர ஒரு இளம் கேப்டன் வேண்டும் என முடிவு செய்து குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, ஒரு முறை கோப்பையும் பெற்றுத் தந்த ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு வர வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பாண்டியா, அடுத்த இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டு வந்தார். அதை நம்பியே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் அவரை வம்படியாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் பேசி பெரிய அளவில் பணப் பரிமாற்றம் செய்து அவரை அழைத்து வந்தது.
தங்கள் அணிக்கு ஐந்து கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது எல்லாமே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி திறமையை நம்பி எடுக்கப்பட்ட முடிவுகள். ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பந்துவீச்சாளர்களை மாற்றுவதில் அவர் தடுமாறுகிறார். ஃபீல்டிங் நிறுத்துவதில் தெளிவான திட்டம் இல்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மா ஃபீல்டிங் நிறுத்தும் பணியை செய்யத் துவங்கினார்.
அடுத்து மூன்றாவது போட்டியின் போது ஹர்திக் பாண்டியா கடும் பதற்றத்தில் இருந்தார். மும்பை அணி 125 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த போது அவர் ஒரு கேட்ச்சை தவற விட்டார். அதற்கு காரணம் அவரது பதற்றம் தான். அணித் தேர்விலும் அவரது முடிவு இருப்பதாக தெரியவில்லை. ஒரு முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன், இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அணியை வழிநடத்திய கேப்டனுக்கான முதிர்ச்சி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் தென்படவில்லை.
அப்படி என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் எப்படி வெற்றிகரமாக செயல்பட்டது? இந்த இடத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை குறிப்பிட வேண்டும். அவர் மற்ற பயிற்சியாளர்கள் போல திட்டத்தை கேப்டனிடம் கூறி விட்டு போட்டியின் போது பின்னே அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர் அல்ல.
மாறாக போட்டியின் ஒவ்வொரு பந்தின் போதும் தானும் அந்தப் போட்டியில் விளையாடுவதைப் போல ஒவ்வொரு பந்துக்கும், ஒவ்வொரு ஓவருக்கும் திட்டம் தீட்டி அதை வீரர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். இடைவேளையின் போதும், பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் நிற்கும் வீரர்கள் மூலமாகவும் அவரது திட்டங்கள் கேப்டனுக்கு சொல்லப்படும். எந்த பந்துவீச்சாளர் எப்போது பந்து வீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும், ஃபீல்டர் எங்கு நிற்க வேண்டும் என்பது வரை அவரே சொல்லி விடுவார். இப்படிப்பட்ட பயிற்சியாளரின் உதவியுடனே ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவை நம்பி ஏமாந்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.