மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த பின் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அந்தப் போட்டிக்கு பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில் ரோஹித் சர்மா குறித்து சூசகமாக பேசிய ஒரு விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
2024 ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களின் நீண்ட நாள் கேப்டன்களை மாற்றின. பத்து ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டிய நியமிக்கப்பட்டார். மறுபுறம் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த கேப்டனாக தேர்வு செய்தார்.

ருதுராஜ் கெய்க்வாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டன் பதவிக்காக தயார் செய்த பின்பே கேப்டன் பதவியை அளித்தார் தோனி. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் எல்லா முடிவுகளும் அணியின் உரிமையாளர்கள் அம்பானி குடும்பத்தினரால் எடுக்கப்பட்டன. அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த தங்கள் அணியின் முன்னாள் வீரர் ஹர்திக் பாண்டியாவை மீனுட்ம் மீண்டும் மும்பை அணிக்கு வரவழைத்து அவருக்கு கேப்டன் பதவியை அளித்தனர்.
அது ரோஹித் சர்மாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது., ரோஹித் சர்மாவுக்கு பின் மும்பை அணியின் கேப்டனாக வாய்ப்பு பெறலாம் என கனவுகளுடன் இருந்த பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் அந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் சிஎஸ்கே போல இல்லாமல் பெரும் பிளவுகளுடன் 2024 ஐபிஎல் தொடரை சந்தித்தது மும்பை அணி.
அந்த பிளவுகளின் காரணமாக போட்டிகளின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒருவித பரபரப்பான மனநிலையில் பல தவறான முடிவுகளை எடுத்து சொதப்பினார். மேலும், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவரிடம் இருந்து விலகியே இருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா அப்படி இருப்பதிலும் அவர் பக்க நியாயம் ஒன்று உள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் ஆட வேண்டும் என்பது தர்ம சங்கடமான ஒரு நிலை. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வருவதை தவிர்த்து இருக்க வேண்டும் என்பது ரோஹித் சர்மா தரப்பு எண்ணமாக இருக்கலாம்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின் பாண்டியா பேசிய போது, சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு தோனி ஆலோசனை கூறினார். அதனால் அவர்கள் வென்றார்கள் என ஏக்கமாக கூறினார் பாண்டியா. அதன் உள்ளர்த்தம், "தனக்கும் அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா உதவவில்லையே" என்பதே.
ஆனால், சிஎஸ்கே அணியில் நடந்தது வேறு. அங்கு தோனி தான் அணைத்து முடிவுகளையும் எடுத்தார். அடுத்த கேப்டன் யார் என்பதையும் அவரே முடிவு செய்தார். முன்பு ஜடேஜாவை கேப்டனாக தேர்வு செய்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்த உடன் ருதுராஜ் கெய்க்வாட்டை இரண்டு ஆண்டுகள் தயார் செய்தார். அவருக்கு சிஎஸ்கே அணியில் அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுக்கு அத்தனை அதிகாரம் இல்லை. அவர் கேப்டனாக இருந்தால் மட்டுமே அணியின் வெற்றி, தோல்விகளுக்கு பொறுப்பாவார். அங்கு ரோஹித் சர்மாவை தாண்டி அந்த அணியின் உரிமையாளர்கள் அணியின் ஒவ்வொரு நகர்விலும் நேரடியாக பங்கெடுத்து வருகிறார்கள். எனவே, தன்னை கேப்டனாக இருக்க வேண்டாம் என அவர்கள் கூறிய பின் ஒரு வீரராக அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்வோம் என்ற மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இனியும் ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவை எதிர்பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. "சிஎஸ்கே அணியின் கேப்டனுக்கு, கேப்டனாக இல்லாத தோனி உதவுகிறாரே, எனக்கு ரோஹித் உதவவில்லையே" என கதறுவதால் எந்த பயனும் இல்லை.