மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர் ஒருவரை பார்த்து பயந்து போய் பேட்டிங் ஆர்டரில் கீழே இறங்கி வந்ததாக இர்பான் பதான் கூறி இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு பாண்டியா கேப்டனாகி இருந்ததாலும், ரோஹித் பதவியை நீக்க பாண்டியா ஒரு வகையில் காரணம் என செய்திகள் வெளியான நிலையிலும், பாண்டியாவின் ஒவ்வொரு அசைவுகளையும் அனைவரும் கவனித்து வந்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த ஒவ்வொரு முடிவையும் அனைவரும் உற்று நோக்கினர். இந்த நிலையில் இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பந்து வீசிய போது முதல் ஓவரை பும்ராவிடம் கொடுக்காமல் தானே முதல் ஓவரை வீசினார் ஹர்திக் பாண்டியா.
அடுத்து சேஸிங் செய்த போது 16வது ஓவரில் விக்கெட் விழுந்த போது ஹர்திக் பாண்டியா தான் பேட்டிங் செய்ய வராமல் டிம் டேவிட்டை அனுப்பி வைத்தார். ஆனால், ரஷித் கான் ஓவரில் சுழற் பந்துவீச்சில் பேட்டிங் செய்ய திணறிய டேவிட் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா அப்போது பேட்டிங் இறங்கி இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கக் கூடும் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் அது குறித்து பேசிய இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா பேட்டிங் இறங்காத காரணமே அப்போது ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. இதை அடுத்து ரஷித் கான் ஓவரை தவிர்க்க திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட்டை அனுப்பியதாகவும், ரஷித் கான் பந்துவீச்சை சந்திக்க பயந்தே ஹர்திக் பாண்டியா இப்படி செய்ததாக இர்பான் பதான் கூறி இருக்கிறார்.